பேரங்காடி ஒன்றில் பகுதிநேர காசாளராக பணிபுரிந்த மாது ஒருவர், 34 வாடிக்கையாளர்களின் வங்கி அட்டை விவரங்களைக் குறித்துக்கொண்டு, பொதுப் போக்குவரத்துப் பயணங்களுக்காக பயன்படுத்தப்படும் ஈஸி-லிங்க் அட்டைகளில் $41,330 மதிப்பிலான 1,011 பரிவர்த்தனைகளைத் திருட்டுத்தனமாக செய்தார்.
கேஸ் சியூ காயிங் எனும் அந்த 30 வயது மாது, பணம் நிரப்பப்பட்ட 500க்கும் அதிகமான ஈஸி-லிங்க் அட்டைகளிலிருந்து பணத்தை ரொக்கமாகப் பெற பல்வேறு எம்ஆர்டி நிலையங்களுக்குச் சென்றார்.
முறைகேடான கணிணிப் பயனீட்டுச் சட்டத்தின்கீழ் $28,000க்கும் அதிகமான தொகையைக் கையாடியதாக 11 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 21) அவருக்கு எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
எஞ்சிய தொகையைக் கையாடியதுடன் தொடர்புடைய மேலும் 24 குற்றச்சாட்டுகளும் அந்த மாதுக்குத் தண்டனை விதிப்பதில் கருத்தில் கொள்ளப்பட்டன.
2018ஆம் ஆண்டு ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், உட்லண்ட்ஸ் அவென்யூ 1ல் உள்ள பேராங்காடியில் சியூ பணிபுரிந்தார்.
2018 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை ஈஸி-லிங்க் அட்டைகளில் சியூ பணம் நிரப்பினார். பின்னர் அந்த அட்டைகளிலிருந்து அவர் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.