இரு வெவ்வேறு சம்பவங்களில் பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிய 28 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட இருப்பதாக போலிஸ் தெரிவித்துள்ளது.
இவர்கள் இரு பிரிவுகளாகக் குற்றம் சாட்டப்படுவர். கொவிட்-19 கிருமிப் பரவல் தடுப்பு அதிரடித் திட்டம் நடப்பில் இருந்தபோது சமூக ஒன்றுகூடல்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அப்போது 18 பேர் அடங்கிய குழுவினர் வீடு ஒன்றில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
அவர்களில் ஒருவர் மட்டும் நிரந்தரவாசி; மற்றவர்கள் சிங்கப்பூரர்கள். அவர்கள் 19 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
காம்பஸ்வேல் கிரசென்ட் வீட்டில் உள்ள ஒரு தம்பதி மே 8ஆம் தேதி இரவு 9.30 மணி முதல் பின்னிரவு 1 மணி வரை விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர்.
எட்டு ஆண்கள் உள்ளிட்ட 16 பேர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இன்று முதல் வெள்ளிக்கிழமை வரையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இடம்பெறும்.
விதிகளை மீறியதாக 16 பேர் மீதும் முறையாக காரணமின்றி தங்களது வீட்டுக்குள் மற்றவர்களை அனுமதித்ததாக தம்பதி மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்.
மற்றொரு குழுவில் உள்ள 10 பேர் அதிரடித் திட்டம் முடிவுக்கு வந்த பின்னர் ஐந்து பேருக்கு மேல் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டிருந்தபோது ஜூன் 28 பின்னிரவு 12.50 மணிவாக்கில் பியோ கிரசென்ட் புளோக் 42 அருகே ஒன்றுகூடியதாக குற்றச்சாட்டு சுமத்தப்படும்.

