சிங்கப்பூர்-ஜோகூர் பாரு விரைவு ரயில் (ஆர்டிஎஸ்) போக்குவரத்துத் திட்டத்தை இறுதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் இம்மாதம் 30ஆம் தேதி கையெழுத்தாகும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை முடிவுற்றுள்ளதாகக் கூறிய அவர், மொத்தம் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து ஜோகூர் பாரு செல்வதற்கான விரைவு ரயில் திட்டம் முதன்முதலில் 2010ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பின்னர் அது பல கட்டங்களாகத் தள்ளி வைக்கப்பட்டது. நீண்ட தாமதத்திற்குப் பிறகு அதில் இறுதி உடன்பாடு எட்டப்படும் நிலை உருவாகி உள்ளது.
அதன் விளைவாக இரு அரசாங்கங்களும் ‘இருதரப்பு ஆர்டிஎஸ் இணைப்பு ஒப்பந்தங்களை’ தயார் செய்துள்ளன. அதன் முக்கிய அம்சங்களில் ஒன்று சிங்கப்பூரின் எஸ்எம்ஆர்டி கார்ப்பரேஷனும் மலேசியாவின் பிரசாரனா மலேசியா ரயில் போக்குவரத்து நிறுவனமும் இணைந்து செயல்பாட்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்துவது.
ஆர்டிஎஸ் இணைப்பு நிறுவனமாக அது செயல்படும். ஜூலை 30ஆம் தேதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதை மலேசிய போக்குவரத்து அமைச்சர் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். கையெழுத்து சடங்கை இரு நாட்டு பிரதமர்களும் பார்வையிடுவார்கள் என்று தெரிகிறது.