சிங்கப்பூரில் கடந்த மே மாதம் கொவிட்-19 கிருமித் தடுப்பு தொடர்பான கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது சட்டவிரோதமாகக் கூடியதன் தொடர்பில் இன்று ஐந்து பேர் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் முன்னிலையானார்கள்.
அவர்களில் ஒன்றுகூடல் நடந்த செங்காங் அடுக்குமாடி வீட்டு குடியிருப்பாளர்கள் இரண்டு பேரும் அடங்குவர்.
காம்பஸ்வேல் கிரசெண்ட்டில் உள்ள புளோக் 295Cல் இருக்கும் தங்கள் வீட்டுக்குள், மே மாதம் 8ஆம் தேதி இரவு 10 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 2 மணி வரையில், இதர 16 பேரை அனுமதித்ததாக கெசி ஓங் ஷி ஹோங், 32 மற்றும் லியோங் சீ முன், 37, ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இருவருக்குமிடையே என்ன உறவு என்பதை நீதிமன்ற ஆவணங்களும் குறிப்பிடவில்லை.
இவ்விருவருடன் முன்னிலையான மற்ற மூவர், போ யாங் டிங் (21), ஃபெலிசா சுவா ஜியா சுவன் (23) மற்றும் பிரிசிலியா டான் ஸெ ஹுய் (31) ஆவர். ஐவர் மீதும் கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதே வீட்டில் கூடியதாகக் கூறப்படும் இதர எட்டு பேர் மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதன் தொடர்பில் மேலும் நால்வர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொவிட்-19 முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்த காலகட்டமான ஏப்ரல் 7 முதல் ஜூன் 1 வரை சிங்கப்பூரர்கள் தங்களின் வீட்டை விட்டு வெளியேறவோ பிறரைச் சென்று சந்திக்கவோ அனுமதிக்கப்படவில்லை.