வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தமது தங்கும் விடுதி கட்டடத்தின் மேல் மாடி விளிம்பில், பதற்றத்துடன் நின்றிருந்ததைக் காட்டும் காணொளியை சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது.
தாயகம் திரும்புவதற்காக விமானச் சீட்டைப் பதிவு செய்த பிறகு, அந்த ஊழியரின் பயணத்துக்கு முதலாளி அனுமதி அளிக்காததால் அந்த ஊழியர் சஞ்சலமடைந்து அவ்வாறு நடந்துகொண்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (ஜூலை 22) பிபிடி லாட்ஜ் 1Bல் நிகழ்ந்தது. அந்த ஊழியர் அவ்வாறு நடந்துகொண்டபோது மற்ற விடுதிவாசிகள் வெளியில் குழுமி கூச்சலிடுவதைக் காணொளியில் காண முடிந்தது.
அந்த ஊழியர் தங்கியுள்ள விடுதி இம்மாதம் 4ஆம் தேதி கொவிட்-19லிருந்து விடுவிக்கப்பட்டது.
“அந்த ஊழியர் தாய்நாட்டுக்குச் செல்ல விரும்பியிருந்தால் முதலாளியிடம் அது குறித்து விவாதித்திருக்கலாம்,” என்று மனிதவள அமைச்சின் ஃபேஸ்புக் பதிவு குறிப்பிட்டது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது, விடுதியில் இருந்த FAST குழுவினர் அந்த ஊழியரைச் சமாதானப்படுத்தி, அவரது முதலாளியிடமும் பேசி பிரச்சினையைத் தீர்த்தனர்.
அந்த ஊழியர் தாயகம் சென்று திரும்பி வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய, முதலாளி ஒப்புக்கொண்டார்.
வேலை சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தால், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று மனிதவள அமைச்சு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உதவி தேவைப்படும் ஊழியர்கள் வெளிநாட்டு ஊழியர் நிலையத்தை 65362692 என்ற எண்ணில் எந்நேரமும் அணுகலாம். அல்லது www.mom.gov.sg/efeedback என்ற இணையப்பக்கம் வழியாகக் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.