சிங்கப்பூரில் நேற்று உறுதி செய்யப்பட்ட 277 கொவிட்-19 சம்பவங்களில், உள்ளூர் சமூகத்தில் 3 சம்பவங்கள். அவற்றில் ஒன்று, ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட 3 கிருமித்தொற்று சம்பவங்களுடன் தொடர்புடையது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது. அந்த நால்வரையும் உள்ளடக்கி புக்கிட் பாஞ்சாங் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தில் புதிய கிருமித்தொற்று குழுமத்தை அமைச்சு அறிவித்தது.
மலேசியரான அந்த 28 வயது ஊழியர் உலு பண்டான் பேருந்து பணிமனைக்கும் போக்குவரத்து முனையத்துக்கும் சென்றிருந்தார்.
ஜூலை முதல் தேதி அவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன. நேற்று முன்தினம் அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதிய கிருமித்தொற்று குழுமத்தின் தொடர்பில் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொண்ட பரிசோதனைகளில் அவருக்கு கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
உள்ளூர் சமூகத்தில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மற்ற இருவரும் வேலை அனுமதிச் சீட்டு கொண்டவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்தியாவிலிருந்து ஜூலை 12 அன்று திரும்பிய, வேலை அனுமதி அட்டை கொண்டவர்களைச் சார்ந்த இருவருக்கும் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இங்கு திரும்பியபின் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 8ஆக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 11 ஆக இருந்தது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 4ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 6 ஆக இருந்தது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொவிட்-19 தொடர்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் சிகிச்சை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.