சிங்கப்பூரில் நேற்று (ஜூலை 27) உறுதி செய்யப்பட்ட 469 கொவிட்-19 சம்பவங்களில், 15 பேர் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்ற தகவலை சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்தியாவிலிருந்து இம்மாதம் 12 முதல் 14ஆம் தேதிக்குள் வந்த, வேலை அனுமதி அட்டை உடையவர்களைச் சார்ந்த இருவரில் ஒருவர் ஒரு வயது ஆண் குழந்தை.
இந்தப் பிரிவில் எஞ்சிய 13 பேரில் இருவர் சிங்கப்பூரர்கள். அவர்கள் இந்தியாவிலிருந்து இம்மாதம் 15ஆம் தேதி திரும்பியவர்கள். வேலை அனுமதி அட்டை உடைய 11 பேர், இம்மாதம் 14, 15 தேதிகளில் இந்தியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நடுகளிலிருந்து வந்தவர்கள்.
உள்ளூர் சமூகத்தில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சிங்கப்பூரர்; மற்றவர் வேலை அனுமதி அட்டை உடையவர்.
எண் 6 சுங்கை காடுட் ஸ்திரீட் 2ல் உள்ள ஊழியர் தங்கும் விடுதியில் 2 புதிய கிருமித்தொற்று குழுமங்களை அமைச்சு அறிவித்தது.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 5ஆக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 10 ஆக இருந்தது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 3ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 5 ஆக இருந்தது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொவிட்-19 தொடர்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் சிகிச்சை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.