உள்ளூரில் ஒன்றாக சேர்ந்து உலாவருதல், சைக்கிளோட்டுதல், படகோட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் 10 பேர் வரை பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அத்தகைய நடவடிக்கைகளில் அதிகபட்சமாக 5 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி இருந்தது.
பொது இடங்களில் கூடுவதற்கு தற்போதைய வரம்பு ஐவர் மட்டுமே. 10 பேர் வரை அனுமதிக்கப்பட்டாலும் 5க்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அவர்கள் 2 குழுக்களாக (ஒவ்வொரு குழுவிலும் 5க்கு மிகாமல்) பிரிக்கப்படுவதுடன் அந்தக் குழுக்களிடையே தொடர்பு இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட வழிகாட்டி நடைமுறைகளை சுற்றுலா நிறுவனங்களுக்காக சிங்கப்பூர் சுற்றுப்பயணக் கழகம் இன்று (ஜூலை 28) வெளியிட்டது.
அதிகபட்சமாக 8 மணி நேரம் அத்தகைய சுற்றுலா நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். மேலும், அவ்வாறு செல்லும்போது ஒலிப்பான், ஒலிவாங்கி சாதனங்களை உடன் எடுத்துச் சென்றாலும் பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய தனித்தனி ஒலிவாங்கி, ஒலிப்பான்களைத் தொடர்புகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.
சுற்றுலாக்களின் தொடர்பில் வாகனங்களில் பயணம் செய்யவேண்டியதிருந்தால், அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். அனைத்து நடவடிக்கைகளிலும் பாதுகாப்பான இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் உள்ளூரில் சுற்றுப் பயணத் துறையைப் பெருக்கவும் இந்தப் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
வர்த்தக, தொழில் அமைச்சின் அனுமதியுடன், சுற்றுப் பயண நிறுவனங்கள் இம்மாதத்திலிருந்தே நடவடிக்கைகளைத் தொடங்க இயலும்.
இதுவரை பெறப்பட்ட 47 விண்ணப்பங்களில் 36 ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுவிட்டதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.
SingapoRediscovers எனப்படும் புதிய பிரசாரத்தை சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், என்டர்பிரைஸ் சிங்கப்பூர், செந்தோசா மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து $45 மில்லியன் செலவில் கடந்த வாரம் தொடங்கின. கொவிட்-19 சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் பயணத்துறை, உள்ளூர் உணவகங்கள், கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றில் மக்கள் செலவிட இந்தத் திட்டம் ஊக்குவிக்கும்.