சிங்கப்பூரில் நேற்று (ஜூலை 28) உறுதி செய்யப்பட்ட 359 கொவிட்-19 சம்பவங்களில், இருவர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்ற தகவலை சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்கள் இருவரும் இம்மாதம் 12, 13 தேதிகளில் சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.
இந்தியாவிலிருந்து வந்த, வேலை அனுமதி அட்டை கொண்ட ஒருவருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
அந்தப் பிரிவில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட சேர்ந்த மற்றொரு நபர் 8 வயது அமெரிக்க சிறுமி.
இவ்விருவருக்கும் கிருமித்தொற்று அறிகுறிகள் ஏதுமில்லை.
உள்ளூர் சமூகத்தில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர் 29 வயது ஆடவர். அவர் வேலை அனுமதி அட்டையுடன் இங்கு பணிபுரிபவர்.
இந்திய நாட்டவரான அவர், ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் இல்லை.
புதிய கிருமித்தொற்று குழுமம் எதுவும் நேற்று அறிவிக்கப்படவில்லை.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 4ஆக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 10 ஆக இருந்தது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 2ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 5 ஆக இருந்தது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொவிட்-19 தொடர்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் சிகிச்சை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.