நான்கு வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மூன்று பேரை வழக்கறிஞர்கள் பிரதிநிதிக்கின்றனர்.
அந்தச் சிறுமியின் தாயார் ஃபூ லி பிங் மீதும் வோங் ஷி சியாங் எனும் ஆடவர் மீதும் அச்சிறுமியைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
லிம் ஆ வூ சாலையில் அமைந்துள்ள கூட்டுரிமை குடியிருப்புப் பகுதியில் இவ்வாண்டு பிப்ரவரியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
ஃபூ, வோங் ஆகிய இருவருக்கும் இடையிலான உறவு குறித்த விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் வெளியிடப்படவில்லை.
மேகன் குங் யு வாய் எனும் அந்தச் சிறுமியின் உடலை எரிக்க நொவெல் சுவா ருவோஷி எனும் மற்றொரு மாதுடன் ஃபூவும் வோங்கும் கூட்டு சேர்ந்ததாக சொல்லப்படுகிறது.
மத்திய போலிஸ் பிரிவிலிருந்து காணொளிக் காட்சி மூலம் அந்த மூவரும் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அந்த மூவர் மீதும் கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவர்களை வழக்கறிஞர்கள் பிரதிநிதிக்கின்றனர்.
இந்த வழக்கிற்கு முன்னதாகவே வோங்கிற்கு குற்றப் பின்னணி உள்ளது.
மற்ற குற்றங்களுடன் தொடர்பிலான வழக்குகளில் இதற்குமுன் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வோங் மீது ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
வோங், ஃபூ, சுவா ஆகிய மூவரும் மத்திய போலிஸ் பிரிவில் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர்களது வழக்கு விசாரணை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.