சிங்கப்பூரில் நேற்று (ஜூலை 31) உறுதி செய்யப்பட்ட 396 கொவிட்-19 சம்பவங்களில், மூவர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்ற தகவலை சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவர்களில் ஒருவர் ஆறு வயது சிங்கப்பூர் சிறுமி. கடந்த மாதம் 3ஆம் தேதி இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர். நேற்று முன்தினம் அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
மற்ற இருவரும் இந்தியாவிலிருந்து திரும்பியவர்கள். ஒருவர் 13 வயது நிரந்தரவாசி; மற்றவர் சார்ந்திருப்போர் அட்டையில் இருக்கும் 28 வயது மாது. இவர்கள் இருவரும் ஜூலை 19ஆம் தேதி இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த இம்மூவருக்கும் கிருமித்தொற்று அறிகுறிகள் ஏதுமில்லை.
உள்ளூர் சமூகத்தில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மூவரில் இருவர் வேலை அனுமதி அட்டையுடன் இங்கு பணிபுரிபவர்கள். ஒருவர் குறுகிய கால சுற்றுப்பயண அனுமதி அட்டை வைத்திருப்பவர்.
நேற்று புதிய கிருமித்தொற்று குழுமங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 3 ஆக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 8 ஆக இருந்தது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 1 ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 4 ஆக இருந்தது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொவிட்-19 தொடர்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் சிகிச்சை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.