சிங்கப்பூரில் மேலும் 127 ஊழியர் தங்கும் விடுதிகள் கிருமித்தொற்றிலிருந்து விடுபட்டதாக நேற்று இரவு மனிதவள அமைச்சு அறிவித்தது. இதனையும் சேர்த்து, கொவிட்-19லிருந்து 1,109 விடுதிகள் கிருமித்தொற்றிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
திட்டமிட்டபடி, ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள்ளாக, எட்டு தங்கும் விடுதிகளில் 17 தனிப்பட்ட புளோக்குகள் தவிர, மற்ற அனைத்து விடுதிகளும் கொவிட்-19லிருந்து விடுவிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்ப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
அந்த 17 கட்டடங்கள் தனிமைப்படுத்தல் வளாகங்களாகச் செயல்படும்.
கட்டுமானம், கடல்துறை கப்பல் பட்டறை, பதனீடு போன்ற துறைகளைச் சேர்ந்த 265,000 ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முன்பு அந்த எண்ணிக்கை 186,000 ஆக இருந்தது.