இந்தியாவிலிருந்து திரும்பிய 7 பேருக்கு கொவிட்-19; ஒருவர் 5 வயது சிறுவன்

இந்தியாவிலிருந்து திரும்பிய 7 பேருக்கு கொவிட்-19; ஒருவர் 5 வயது சிறுவன்

1 mins read
0218fee1-474e-4d91-bb50-7912a053ee33
அனைவரும் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். அவர்களில் ஆக இளையவருக்கு வயது 5; ஏற்கெனவே கிருமித்தொற்று கண்ட ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் நேற்று (ஆகஸ்ட் 4) நண்பகல் வரை உறுதி செய்யப்பட்ட 295 கொவிட்-19 சம்பவங்களில், வெளிநாடுகளிலிருந்து திரும்பி, இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 7 பேர் என்ற தகவலை சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். அவர்களில் ஆக இளையவருக்கு வயது 5; ஏற்கெனவே கிருமித்தொற்று கண்ட ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருந்தது.

சார்ந்திருப்போர் அனுமதி அட்டையில் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு நேற்று முன்தினம் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

உள்ளூர் சமூகத்தில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சிங்கப்பூர் பெண்மணி; மற்றவர் வேலை அனுமதிச்சீட்டு வைத்திருக்கும் பங்ளாதேஷ் நாட்டவர்.

அத்தியாவசியச் சேவைகளில் இருப்போருக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை பரிசோதனைகளில் 31 வயதான சிங்கப்பூர் பெண்ணுக்கு கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

வேலை அனுமதிச்சீட்டு வைத்திருக்கும் 46 வயதான பங்ளாதேஷ் ஆடவர், ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவருடன் தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டவர்.

இந்த இருவருக்கும் கிருமித்தொற்று அறிகுறிகள் இல்லை.

உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 2 ஆக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 4 ஆக இருந்தது.

ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 1 ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 2 ஆக இருந்தது.

இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்