மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து பயணம் செய்வோர் சிங்கப்பூர் வழியாகச் செல்லலாம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (SIA) அண்மையில் அளிக்கப்பட்ட அனுமதிகளால் இது சாத்தியமாகிறது.
வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்ய கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த 5 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சிங்கப்பூர் வழியாகச் செல்ல சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க்ஏர், ஸ்கூட் ஆகிய விமானங்களின் பயணிகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக SIA இன்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
கொவிட்-19 சூழலுக்கு முன்பாக, இந்த 5 நாடுகளைச் சேர்ந்த பயணிகள்தான் அதிக அளவில் SIA குழும விமானங்கள் மூலம் சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டது.
ஆஸ்திரேலியா, சீனா, இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்ய SIA ஏற்கெனவே அனுமதி பெற்றிருந்தது.
சிங்கப்பூர் வழியாக பயணிகள் அனுமதிக்கப்படுவதால் SIA குழுமத்துக்கு உதவிகரமாக இருப்பதுடன், அதனால் ஏற்படும் தாக்கம் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பயணிகளின் எண்ணிக்கை உச்சபட்சமாக இருந்தபோதுகூட, சிங்கப்பூர் வழியாகச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் மூன்றில் ஒரு பங்குதான் என்று கடந்த வாரம் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்திருந்தார்.
தற்போதைய நிலவரப்படி தினமும் சராசரியாக 400 பயணிகள் சிங்கப்பூர் வழியாகச் செல்கின்றனர். இதன்படி பார்த்தால், ஆண்டுக்கு 150,000 அத்தகைய பயணிகள் சிங்கப்பூர் வழியாகச் செல்வர். ஆனால், கொவிட்-19க்கு முந்தைய காலகட்டத்தில் ஆண்டுக்கு 20 மில்லியன் பயணிகள் சிங்கப்பூர் வழியாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.