தெம்பனிஸ் விரைவுச் சாலையில் சிலேத்தார் விரைவுச் சாலையை நோக்கிய பாதையில் நேற்று மாலை ஒரு கார், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில், 62 வயதான மோட்டார்சைக்கிளோட்டிய ஆடவர், பின்னால் அமர்ந்து பயணம் செய்த 59 வயது மாது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக துணை மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
காரின் ஓட்டுநரான 31 வயது ஆடவர், 10 முதல் 28 வயதுக்குட்பட்ட அவரது மூன்று பயணிகள் ஆகியோர் சுய நினைவுடன் இருந்த நிலையில் செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து நேற்று மாலை 4.23 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்கிறது.
சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் காணப்பட்டன. மோட்டார் சைக்கிள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததையும் ஒரு தலைக்கவசம் சாலையில் கிடந்ததையும் அவற்றில் காண முடிந்தது.
விபத்து காரணமாக அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரைவுச் சாலையின் நான்கு தடங்களில் மூன்று மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.