ஏற்கெனவே கிருமித்தொற்றிலிருந்து விடுவிக்கப்பட்ட ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் கட்டுமான, கடல்துறை, பதனீட்டுத் துறை ஊழியர்களுக்கு இருவாரங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் கொவிட்-19 பரிசோதனைகளின்போது சுமார் 100 பேருக்கு கிருமித்தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தத் தகவலை நேற்று (ஆகஸ்ட் 18) மனிதவள, சுகாதார அமைச்சுகள் தெரிவித்தன.
சுமார் 100,000 வெளிநாட்டு ஊழியர்கள் இந்த வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
தற்போது கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஊழியர்களில் சிலர் மீண்டும் வேலைக்குத் திரும்பியவர்கள் என்று அமைச்சுகள் தெரிவித்தன. உரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் 60 விழுக்காட்டினர் குணமடைந்துவிட்டதாகவும் உரிய நடவடிக்கைகளால், கிருமித்தொற்று திறம்பட கட்டுப்படுத்தப்பட்டதாகவும் ஒரு சில கூடுதல் தொற்றுச் சம்பவங்கள் மட்டுமே கண்டறியப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்தப் புதிய 100 கிருமித்தொற்று சம்பவங்களால் சுமார் 7,000 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர்களில் சுமார் 2 விழுக்காட்டினருக்கு மட்டுமே பின்னர் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கமான பரிசோதனைகளுக்கு ஊழியர்களை அனுப்பும் பொறுப்பு நிறுவனங்களுடையது என்பதால் பத்தில் 7 நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பரிசோதனைக்கு அனுப்புவதற்கான இணையவழிப் பதிவை நாடுகின்றனர்.
கொவிட்-19லிருந்து விடுவிக்கப்பட்ட புளோக்கிலிருந்து புதிதாக யாருக்கேனும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த புளோக்கில் இருக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட தங்குமிடங்களில் பதிவாகியுள்ள கிருமித்தொற்று சம்பவங்கள், விழிப்புடன் இருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அமைச்சுகள் குறிப்பிட்டன.