துவாசில் உள்ள துவாஸ் வியூ ஊழியர் தங்கும் விடுதியில் புதிய கிருமித்தொற்று குழுமம் உருவாகி இருப்பதாக நேற்று (ஆகஸ்ட் 24) சுகாதார அமைச்சு தெரிவித்தது.
எண் 70 துவாஸ் சவுத் அவென்யூ 1ல் இருக்கும் அந்த விடுதியில் நேற்று ஒருவருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது. அங்கு வேறு ஐவருக்கு ஏற்கெனவே கொவிட்-19 உறுதிசெய்யப்பட்டது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய கிருமித்தொற்று குழுமங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் 11ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள அனைத்து ஊழியர் தங்கும் விடுதிகளும் கொவிட்-19லிருந்து விடுபட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, கடந்த சனிக்கிழமை சுங்கை தெங்கா லாட்ஜ் ஊழியர் விடுதியில் புதிய கிருமித்தொற்று குழுமம் உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன் தினம் காக்கி புக்கிட்டில் இருக்கும் மற்றொரு தங்கும் விடுதியிலும் புதிய கிருமித்தொற்று குழுமம் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டது.
விடுதியில் வசிக்கும் ஊழியர்களிடையே கண்டுபிடிக்கப்பட்ட கொவிட்-19 சம்பவங்கள் முன்பு ஏற்பட்டவையாக இருக்கலாம் என சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகள் இயக்குநர் கென்னத் மாக் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
நேற்று சுகாதார அமைச்சு அறிவித்த 51 கிருமித்தொற்று சம்பவங்களில் ஒன்று உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையது. சிங்கப்பூரரான அந்தப் பெண்ணுக்கு வயது 65. ஏற்கெனவே கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் அவர்.
வெளிநாடுகளிலிருந்து திரும்பி இல்லத் தனிமைப்படுத்தப்பட்ட எழுவருக்கு நேற்று தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் நிரந்தரவாசி; இருவர் வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள்; மூவர் சார்ந்திருப்போர் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள்; ஒருவர் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்.
இந்த எழுவரில் மூவர் இந்தியாவிலிருந்து திரும்பிய சிறுவர்கள்; 2 முதல் 3 வயதுக்குட்பட்டவர்கள்.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து 2 ஆக உள்ளது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த இரு வாரங்களின் தினசரி சராசரி 1 ஆக உள்ளது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.