நியூசிலாந்து, புருணை ஆகிய நாடுகளிலிருந்து வருவோர், இங்கு தங்கியிருக்கும் காலத்தில் எந்நேரமும் ‘டிரேஸ்டுகெதர்’ செயலியைப் பயன்படுத்த வேண்டும். அத்துடன் சிங்கப்பூரை விட்டுச் சென்ற பிறகு 14 நாட்களுக்குத் தொடர்ந்து அச்செயலியைத் தங்களின் கைபேசியில் வைத்திருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இருநாட்டு வருகையாளர்களுக்கு, இங்கு தங்கியிருக்கும் காலத்திலும் சிங்கப்பூரிலிருந்து வெளியேறிய இரண்டு வாரங்களிலும் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியானால், தொடர்புகளின் தடங்களைக் கண்டறிவதை இப்புது நிபந்தனை எளிமையாக்கும்.
அவ்வாறு அவர்களுக்குக் கிருமி தொற்றியிருந்தால், சுகாதார அமைச்சுக்குத் தேவையான தகவல்களை அவர்கள் செயலி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நியூசிலாந்து, புருணை ஆகிய நாடுகளுக்குத் தன் எல்லையை சிங்கப்பூர் திறக்கவுள்ளதாக சென்ற வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டதை அடுத்து பயணத்துக்கான நிபந்தனைகளை ஆணையம் இன்று வெளியிட்டது.
“பாதுகாப்பான முறையில் சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து மையம் புத்துயிர் பெறுவதுடன் பொதுச் சுகாதாரத்திற்கு ஏற்படக்கூடிய அபாயமும் குறைந்த அளவில் இருக்க வேண்டும். இதற்கு இந்தப் பயண நிபந்தனைகள் கைகொடுக்கும்,” என்றது ஆணையம். இரு நாட்டு வருகையாளர்களுக்குக் கூடுதலாக வேறு நிபந்தனைகளும் உண்டு என்றது ஆணையம்.
அவர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன், அதற்கு முந்தைய 14 நாட்களையும் புருணை அல்லது நியூசிலாந்தில் கழித்திருக்க வேண்டும். இடையிலேயே வேறு விமான நிலையங்களில் இறங்காமல் நேரடி விமானச் சேவை மூலம் அவர்கள் சிங்கப்பூருக்கு வந்திருக்க வேண்டும்.
இங்கு வந்தடைந்ததும் கொவிட்-19 பரிசோதனையை அடுத்து, விமான நிலையத்திலிருந்து அவர்கள் தங்கவுள்ள இடத்திற்குத் தனியார் போக்குவரத்து, டாக்சி, தனியார் வாடகை வண்டி ஆகியவற்றில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.
பரிசோதனை முடிவுகள் உறுதியாகும் வரை, அடுத்த 48 மணி நேரத்திற்குத் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர்கள் இருக்க வேண்டும்.