சிங்கப்பூருக்கான இந்தியத் தூதராக திரு பெரியசாமி குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். திரு குமரன் 1992ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுச் சேவையில் இணைந்தார்.
ஜனவரி 1994லிருந்து ஜுன் 1997 வரை எகிப்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அவர் மூன்றாம் செயலாளராகச் சேவையாற்றினார்.
ஜுலை 1997லிருந்து டிசம்பர் 2000 வரை லிபியத் தலைநர் திரிபோலியில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இரண்டாம், முதலாம் செயலாளராகச் சேவையாற்றினார்.
பெல்ஜியத்தில் உள்ள இந்தியத் தூதரகத்திலும் அவர் சேவையாற்றினார்.
இந்திய வெளியுறவு அமைச்சில் துணைச் செயலாளராகப் பதவி வகித்த திரு குமரன் அதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய பதவிகளில் இருந்தார்.
2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பதவி வகித்தார். அதையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சின் தூதரக, கடப்பிதழ், விசா பிரிவின் இணைச் செயலாளராக அவர் இருந்தார்.
இவ்வாண்டு ஜூலை மாதம் வரை கத்தாருக்கான இந்தியத் தூதராக அவர் சேவையாற்றினார்.
திரு குமரனுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.