இம்மாதம் ஏப்ரல் மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்தில் பயணிகள் சரியான முறையில் முகக்கவசம் அணியாதது குறித்து சச்சரவில் முடிந்த சுமார் 80 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
முகக்கவசம் அணியாத சுமார் 40 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக ஆணையம் நேற்று தெரிவித்தது.
மற்ற சம்பவங்களுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை அல்லது போலிசின் தலையீடு இல்லாமல் அவற்றுக்குத் தீர்வு காணப்பட்டன.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பயணிகள் சரியான முறையில் முகக்கவசம் அணியாதது குறித்து அவர்களுக்கும் பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே சச்சரவு ஏற்படுவதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வலம் வந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
சரியான முறையில் முகக்கவசம் அணியுமாறு பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் அறிவுறுத்தியதற்குப் பெரும்பாலான பயணிகள் ஒத்துழைத்தாலும், ஊழியர்களிடம் ஒரு சிலர் தகாத முறையில் நடந்துகொண்டதாக ஆணையம் கூறியது.
“பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் மீது பயணிகள் தகாத முறையில் நடந்துகொள்வதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. குற்றம் புரிபவர்கள் சட்டத்தின்படி கையாளப்படுவர்,” என்று ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.
முறையான முகக்கவசம் அணிவதைத் தவிர்த்து வேறெந்தவொரு துணியையும் கொண்டு முகக்கவசமாகப் பயன்படுத்துவதை சுகாதார அமைச்சு பரிந்துரைக்காது என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.