சிங்கப்பூரில் நேற்று சுகாதார அமைச்சு அறிவித்த 60 கிருமித்தொற்று சம்பவங்களில் 10, வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
அவர்களில் ஒருவர் 76 வயது நிரந்தரவாசி. அவர் இம்மாதம் 14ஆம் தேதி இந்தியாவிலிருந்து திரும்பினார். அவருக்கு நேற்று முன்தினம் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
மற்ற 9 பேரில் இருவர் சிங்கப்பூரர்கள், இருவர் நிரந்தரவாசிகள், இருவர் சார்ந்திருப்போர் அட்டை வைத்திருப்பவர்கள், ஒருவர் நீண்டகால வருகை அனுமதி அட்டை வைத்திருப்பவர்.
நேற்றைய 60 சம்பவங்களில் உள்ளூர் சமூகத்தில் பதிவானவை 3; அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், இருவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மவுண்ட்பேட்டனில் இருக்கும் புளோக் 4A ஜாலான் பத்து உணவங்காடிக் கடைக்கு கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் சென்றதாக அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. இம்மாதம் 14 முதல் 23ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அத்தகையோர் 10 தடவை அங்கு சென்றதாகக் கூறப்பட்டது.
கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.
முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து 2 ஆக உள்ளது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த இரு வாரங்களின் தினசரி சராசரி 1 ஆக உள்ளது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.

