சிங்கப்பூரில் மருத்துவர்கள், ஆய்வாளர்கள் இடம்பெற்ற ஒரு குழு, கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு இதயப் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணத்தைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதயப் பாதிப்பைத் தவிர்ப்பதற்கான வழிமுறையையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
தேசிய பல்கலைக்கழக இதய மையத்தைச் சேர்ந்த அந்த மருத்துவ ஆய்வுக்குழு, கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட 100 பேரை ஆய்வுப் பணியில் ஈடுபடுத்த இலக்கு கொண்டுள்ளது.
கொவிட்-19 பாதிப்பிலிருந்து நோயாளிகள் மீண்ட பிறகும் சிலருக்கு நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதை வெளிநாட்டுத் தகவல்களும் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்த பிறகு அவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவது சற்று அரிது என்றாலும், நிலைமையைத் தாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கொவிட்-19 நோய் ஒரு குறிப்பிட்ட உறுப்பை மட்டும்தான் பாதிக்கும் என்றில்லாமல் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், மூளை போன்ற உறுப்புகளைப் பாதிக்கக்கூடும் என்று கருத வேண்டும் என்று தேசிய பல்கலைக்கழக இதய மையத்தின் இயக்குநரும் மூத்த மருத்துவருமான பேராசிரியர் டான் ஹுவே சீம் கூறினார்.