நிரந்தரவாசத் தகுதிக்கான விண்ணப்பத்துடன் போலி சான்றிதழ் சமர்ப்பித்த ஆடவருக்கு 21 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை

நிரந்தரவாசத் தகுதிக்கான விண்ணப்பத்துடன் போலி சான்றிதழ் சமர்ப்பித்த ஆடவருக்கு 21 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை

2 mins read
e5b83cf7-3f1b-4543-a723-0c4cdc7e6f1d
முகம்மது சொஹையில் எனும் அந்த ஆடவர் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நிலையில், போலியான இளங்கலைப் பட்டச் சான்றிதழை  அவர் விண்ணப்பத்துடன் இணைத்திருந்தார். -

சிங்கப்பூரில் நிரந்தரவாசத் தகுதி பெறும் நோக்கில், 20 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பம் செய்த பாகிஸ்தான் நாட்டு ஆடவர், தாம் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அது பொய்யான தகவல் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முகம்மது சொஹையில் எனும் அந்த ஆடவர் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நிலையில், போலியான இளங்கலைப் பட்டச் சான்றிதழை அவர் விண்ணப்பத்துடன் இணைத்திருந்தார்.

தற்போது 51 வயதாகும் அந்த ஆடவருக்கு இன்று மூன்று வார சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அந்த ஆடவர் மேல் முறையீடு செய்திருந்தார்.

தமது குற்றச் செயல் பற்றி வருத்தம் தெரிவித்ததால் சொஹையிலுக்கு மூன்று வாரத்துக்கு மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்று தீர்ப்பின்போது தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் குறிப்பிட்டார்.

1995ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு 'எம்ப்ளாய்மென்ட் பாஸ்' மூலம் சிங்கப்பூருக்கு வந்தார் சொஹையில். அதற்கு அடுத்த ஆண்டில் அவர் சிங்கப்பூர் மாது ஒருவரை மணந்தார்.

அதற்கு அடுத்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் வாக்கில் நிரந்தரவாசத் தகுதிக்கு விண்ணப்பித்தார் அவர். அப்போது அவர் தமது கல்வித் தகுதி பற்றி பொய்யான தகவலை வழங்கி, போலி சான்றிதழைச் சமர்ப்பித்தார். அந்தச் சான்றிதழை அவரது உறவினர் ஒருவர் பாகிஸ்தானிலிருந்து வாங்கி அனுப்பியிருந்தார்.

நிரந்தரவாசத் தகுதி வழங்குவதற்கு கல்வித் தகுதியும் கவனத்தில் கொள்ளப்படக்கூடிய அம்சம் என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

அவர் சமர்ப்பித்தது போலிச் சான்றிதழ் என்பது எப்போது, எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

சொஹையிலுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்; அனைவரும் சிங்கப்பூர் குடிமக்கள். அவர் சொந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிரந்தரவாசத் தகுதியைப் பயன்படுத்தி அவர் வேறு பலன்கள் எதையும் அனுபவிக்கவில்லை என்று சொஹையிலின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்