அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து அடையாள அட்டை, கடப்பிதழ் ஆகியவை தொடர்பாக சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் மின்னிலக்க அறிவிப்புகள் அனுப்பிவைக்கப்படும். மின்னிலக்க அறிவிப்பு கிடைத்ததும், அனுப்பிவைக்கப்படும் இணைப்பின் மூலம் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் இணையத்தளத்துக்குச் சென்று தங்கள் விண்ணப்பங்களுக்கான முடிவுகளைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
சிங்பாஸ் கணக்கு வைத்திருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் இந்த மின்னிலக்க அறிவிப்புச் சேவை வழங்கப்படும். சிங்பாஸ் கைபேசி செயலி அல்லது சிங்பாஸ் கணக்குடன் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக மின்னிலக்க அறிவிப்பு அனுப்பிவைக்கப்படும் என்று ஆணையம் இன்று தெரிவித்தது.
சிங்பாஸ் கணக்குகளில் தங்கள் தனிப்பட்ட விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்யுமாறு சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் அது நினைவூட்டியது.
கடப்பிதழ் புதுப்பிப்பு, அடையாள அட்டை மறுபதிவு, குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்திடமிருந்து ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நினைவூட்டல் போன்ற விவரங்களுக்காக மின்னிலக்க அறிவிப்புகள் அனுப்பிவைக்கப்படும்.
சிங்பாஸ் கணக்கு வைத்திருக்காத சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளுக்குத் தொடர்ந்து கடிதங்கள் அல்லது மின்னஞ்சல்கள் அனுப்பிவைக்கப்படும். மேலும் பல சேவைகளுக்கு மின்னிலக்க அறிவிப்புகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று ஆணையம் கூறியது.
தனது சேவை விநியோகத்தை மாற்றியமைக்க கொண்டுள்ள கடப்பாட்டின் ஒரு பகுதியாக மின்னிலக்க அறிவிப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
மின்னிலக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தடையற்ற சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அது கூறியது.