சிங்கப்பூரில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முகக்கவசம் அணிவது கடந்த ஏப்ரல் 14 முதல் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், சிங்கப்பூரில் தரையிறங்கிய விமானமும் முகக்கவசத்துடன் காணப்பட்டது பார்ப்போரைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
கார்கோலக்ஸ் ஏர்லைன்ஸ் போயிங் 747-8 நிறுவனத்தின் CLX 7952 விமானத்தின் முன்புறத்தில் காணப்பட்ட நீல நிற முகக்கவசத்தின் பக்கவாட்டுக் கயிறுகள் விமானத்தின் பக்கவாட்டில் காணப்பட்ட, “முகக்கவசம் இல்லாமல் இல்லை” என்ற பொருள்படும் ஆங்கில வாசகத்தை கோடிட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
முகக்கவசத்துடன் விமானம் சாங்கி விமான நிலையத்தில் முதன்முறையாகத் தரையிறங்கி இருப்பதாக சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.
லக்சம்பர்க்கைத் தலைமையகமாகக் கொண்ட அந்த கார்கோ நிறுவனம், தைப்பேயில் விமானத்தில் அண்மையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
லக்சம்பர்க்கில் மக்கள் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்கும் விதத்தில் இந்த முயற்சியை அந்த விமான நிறுவனம் மேற்கொண்டது.
கடந்த 27ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் லக்சம்பர்க்குக்கு செல்லும் வழியில் அந்த விமானம் சிங்கப்பூருக்கு வந்தது. அந்நாட்டு பிரதமர் சேவியர் பெட்டலும் துணைப் பிரதமர் பிரான்காய்ஸ் போஸ்சும் அன்று பிற்பகலில் (உள்ளூர் நேரப்படி) லக்சம்பர்க் விமான நிலையத்தில் அந்த விமானத்தை வரவேற்றனர்.