சிங்கப்பூரில் நேற்று (ஆகஸ்ட் 29) சுகாதார அமைச்சு அறிவித்த 51 கிருமித்தொற்று சம்பவங்களில் 1 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையது. வேலை அனுமதிச் சீட்டு உடைய அவர், 39 வயதான பங்ளாதேஷ் நாட்டவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் இவருக்குத் தொடர்பு இல்லை எனவும், தொடர்புகளின் தடமறியும் பணி தொடர்வதாகவும் கூறப்பட்டது.
இந்தியாவிலிருந்து திரும்பிய 3 வயது சிங்கப்பூர் சிறுமி உட்பட, வெளிநாடுகளிலிருந்து திரும்பிய மூவருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
அந்தச் சிறுமிக்கு கடந்த வெள்ளிக்கிழமை கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
எஞ்சிய 47 பேர் விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள். அவர்களில் 37 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
நேற்று கிருமித்தொற்று அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் நோய்த்தொற்று அறிகுறிகள் இல்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் அவர்களுக்கு கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்தது.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த 2 வாரங்களாக 2 ஆக உள்ளது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த இரு வாரங்களின் தினசரி சராசரி 1 ஆக உள்ளது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் இதுவரை 25.1 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர்; 845,900க்கு அதிகமானோர் உயிரிழந்தனர்.