நிலப் போக்குவரத்து ஆணையம் தொடங்கியுள்ள முன்னோட்டத் திட்டத்தின்கிழ், தேர்ந்தெடுக்கப்பட்ட 2,000க்கும் அதிகமான பயணிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட ஈஸி-லிங்க் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ‘சிம்ப்ளிகோ’ கைபேசி செயலி மூலம் அந்தப் பயண அட்டையில் பணம் நிரப்ப முடியும்.
புதிய அட்டை உடையோர் ‘சிம்ப்ளிகோ’ செயலி மூலம் அவர்களின் பயண விவரங்களைப் பார்க்க முடியும்.
இந்தச் செயலி கடந்த ஆண்டு அறிமுகம் கண்டது. எனினும், மாஸ்டர்கார்ட், விசா, நெட்ஸ் அட்டை வைத்திருப்போர் மட்டும் இதுவரை இந்தச் செயலியைப் பயன்படுத்த முடிந்தது.
ஆனால், இனி ஈஸி-லிங்க் அட்டையில் பணம் நிரப்பும் இயந்திரங்களின் முன்னால் பயணிகள் வரிசையில் நிற்க தேவை இருக்காது.
இந்தச் செயலியைப் பயன்படுத்துவோர் தங்களது குடும்ப உறுப்பினர்களின் ஈஸி-லிங்க் அட்டைகளையும் கணக்கில் இணைத்து அவற்றில் பணம் நிரப்பலாம்.
இந்த முன்னோட்டத் திட்டத்தைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு வாக்கில் பயணிகள் தங்களது ஈஸி-லிங்க் அட்டைகளைப் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று ஆணையம் தெரிவித்தது.
அடுத்த சில ஆண்டுகளில் அனைத்து பயணிகளும் ‘சிம்ப்ளிகோ’ செயலியைப் பயன்படுத்த அனுமதிக்க ஆணையம் திட்டமிட்டு வருகிறது.