தனியார் பேருந்து ஒன்றைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் 41 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உட்லண்ட்ஸ் ரோட்டில் உள்ள கனரக வாகன நிறுத்துமிடத்தில் தமது பேருந்து காணாமல் போனதைக் கண்ட அதன் உரிமையாளர் கடந்த வெள்ளிக்கிழமை போலிசிடம் புகார் அளித்தார்.
அங்கிருந்த போலிஸ் மற்றும் இதர கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காணொளியை ஆராய்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்ட உட்லண்ட்ஸ் மற்றும் ஜூரோங் போலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள், அந்த ஆடவரை அடையாளம் கண்டனர்.
நேற்று கைது செய்யப்பட்ட அந்தச் சந்தேக நபர் மீது மோட்டார் வாகனத்தைத் திருடியதாக இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.