சிங்கப்பூரில் நேற்று (செப்டம்பர் 1) சுகாதார அமைச்சு அறிவித்த 40 கிருமித்தொற்று சம்பவங்களில் 1 மட்டுமே உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையது. வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் 24 வயது சீன நாட்டவரான அந்தப் பெண்ணுக்கு அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறபப்ட்டது.
இந்தியாவிலிருந்து வந்த ஒரு வயது குழந்தை உட்பட 7 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
அறிகுறிகள் ஏதும் அந்தக் குழந்தைக்குத் தென்படவில்லை. குறுகிய கால அனுமதி அட்டை கொண்ட அந்தக் குழந்தைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 3ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 2 ஆக இருந்தது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த இரு வாரங்களின் தினசரி சராசரி 1 ஆக உள்ளது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.

