சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) குழுமம், மலிவுக்கட்டண விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் ஏஷியா ஆகியவை கூடுதல் நகரங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான விமானச் சேவைகளை வழங்க இருக்கின்றன.
தோக்கியோ, ஒசாகா, பலெம்பாங், பெக்கான்பாரு, யோக்யகார்த்தா போன்ற இடங்களுக்கும் சேவையை வழங்க இருப்பதாக எஸ்ஐஏ குழுமத்தின் மலிவுக்கட்டண விமான நிறுவனமான ஸ்கூட் தெரிவித்தது. கடந்த மாதத்தில் அது ஏற்கெனவே 13 இடங்களுக்கு விமானச் சேவையை வழங்கி வந்தது.
ஜகார்த்தா, லண்டன், சிட்னி போன்ற நகரங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களில் கூடுதல் விமானச் சேவைகளை வழங்க இருப்பதாக எஸ்ஐஏ கடந்த வாரம் குறிப்பிட்டது.
இந்த மாதத்தில் இந்தோனீசியாவின் சுரபயாவுக்கு விமானச் சேவையை மீண்டும் தொடங்கவுள்ளது அந்நிறுவனம்.
படிப்படியாக விமானச் சேவையை அதிகரிப்பதன் மூலம், வரும் நவம்பர் மாதத்துக்குள், கொவிட்-19க்கு முன்பிருந்ததைப்போல 11% பயணிகளின் எண்ணிக்கையை SIA குழுமம் எட்டும்.
இம்மாதம் 18ஆம் தேதி கம்போடியாவின் புனோம் பென்னுக்கு விமானச் சேவையை மீண்டும் தொடங்க இருப்பதாக நேற்று முன்தினம் ஜெட்ஸ்டார் ஏஷியா குறிப்பிட்டது.