தங்கும் விடுதிகளில் இரு புதிய கிருமித்தொற்று குழுமங்கள் உருவெடுத்து இருப்பதாக நேற்று சுகாதார அமைச்சு அறிவித்தது.
எண் 49 அட்மிரல்டி ரோடு வெஸ்டில் இருக்கும் கோச்ரேன் லாட்ஜ் II விடுதியில் 14 பேருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது.
வெஸ்ட்லைட் டோ குவான் ஊழியர் விடுதியில் ஏற்கெனவே இருந்த 10 கிருமித்தொற்று சம்பவங்களுடன் 8 புதிய கிருத்தொற்று சம்பவங்களும் உறுதிப்படுத்தப்பட்டன.
நேற்று உள்ளூர் சமூகத்தில் 2 சம்பவங்கள் பதிவாகின. அவை இரண்டுடனான தொடர்புகளைத் தடமறியும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்கள் இருவருக்கும் கிருமித்தொற்று அறிகுறிகள் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கட்டுமானம், கடற்துறை, பதனீடு துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் பரிசோதனைகளில் அவர்களுக்கு கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் நேற்று (செப்டம்பர் 3) சுகாதார அமைச்சு அறிவித்த கிருமித்தொற்று சம்பவங்களில் ஐவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
அவர்களில் ஒருவர் பங்ளாதேஷிலிருந்து திரும்பிய சிங்கப்பூரர்; மற்றொருவர் ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து திரும்பிய சிங்கப்பூரர். இன்னொருவர் இந்தியாவிலிருந்து திரும்பிய நிரந்தரவாசி என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த நீண்டகால அனுமதி அட்டை வைத்திருந்த ஒருவர், வேலை அனுமதிச் சீட்டுடன் பிலிப்பீன்சிலிருந்து இங்கு வந்தவர்.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 3ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 2 ஆக இருந்தது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த வாரம் 2 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 1 ஆக இருந்தது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.