யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானச் சேவை 16,370 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஆனால் அந்த நிறுவனத்துக்காகப் பணிபுரியும் சிங்கப்பூர் ஊழியர்களுக்குப் பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள தனது ஊழியர்களுக்கு மட்டும் இந்த ஆட்குறைப்பு பொருந்தும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் எத்தனை யுனைடெட் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் இருக்கின்றனர் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
வரும் அக்டோபர் மாதம் வரை அரசாங்கம் நிதியுதவி அளிக்கும் என்றும் அதன் பிறகு 16,370 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய இருப்பதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் கூறியது.
கொவிட்-19னால் விமானச் சேவைத் துறை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.
மேலும் பல ஊழியர்களுக்குச் சம்பளம் கிடைக்காது என்று தொழிற்சங்கம் ஒன்று தெரிவித்தது.
கொரோனா நெருக்கடிநிலைக்கு முன்பு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு 90,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.