முஸ்தஃபா சென்டர், குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையக் கட்டடம், கரையோரப் பூந்தோட்டங்கள், விவோசிட்டி, லக்கி பிளாசா, AMK ஹப், டௌன் டவுனில் இருக்கும் E!Hub, பாய லேபார் ஸ்குவேர் போன்ற இடங்களுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக நேற்று (செப்டம்பர் 3) சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.
முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.

