கொவிட்-19 பாதிப்பிலிருந்து பயணிகளைப் பாதுகாக்க, இனி சிங்கப்பூரிலிருந்து கிளம்பும் விமானங்களிலும் இங்கு வந்திறங்கும் விமானங்களிலும் தனிமைப்படுத்தும் இடங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
விமானப் பயணத்தின்போது பயணிகளிடமோ விமானச் சிப்பந்திகளிடமோ காய்ச்சல் அல்லது வேறு கொவிட்-19 அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை உடனே தனிமைப்படுத்த வேண்டும் என்று சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
விமானத்தின் ஒரு பகுதியில் உள்ள இருக்கைகளை இதற்காக பயன்படுத்தலாம் என்று ஆணையம் கூறியது. அத்துடன் அந்த இருக்கைகளுக்கு அருகில் உள்ள கழிவறையும் உடல்நலமில்லாதவர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.
இதற்கு ஏற்ப, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) அதன் விமானங்களில் உள்ள இடது பக்க இருக்கைகளின் கடைசி மூன்று வரிசைகளை இச்சூழலுக்கு ஒதுக்கியுள்ளது.
உடல்நலம் இல்லாதோருக்கு உணவு தரும் எஸ்ஐஏ சிப்பந்திகள் தனிநபர் பாதுகாப்பு உடை அணிந்தவாறு பரிமாற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் ஆலோசனையுடன் ஆணையம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.