கொவிட்-19 தொடர்பில் கடுமையாக்கப்படும் நடவடிக்கைகள்; விதிமுறைகளை மீறினால் தண்டனை

கொவிட்-19 தொடர்பில் கடுமையாக்கப்படும் நடவடிக்கைகள்; விதிமுறைகளை மீறினால் தண்டனை

2 mins read
3b400a9b-75b7-4053-9f9c-b3d610100925
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காத உணவு, பானக் கடைகளும் வாடிக்கையாளர்களும் முதல் முறையாக குற்றம் புரிந்தாலும் எச்சரிக்கைக்குப் பதிலாக தண்டனை பெறவுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.

இது உடனே நடப்புக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடைகளில் ஒன்றுகூடல் அதிகம் இருப்பதால் கொவிட்-19 கிருமி தொற்றும் அபாயமும் அதிகரிக்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு இப்புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய விதிமுறை தொடர்பில் உணவு வர்த்தகங்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டதால் போதுமான காலம் தரப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

அமலாக்க அமைப்புகளின் அதிகாரிகள் தங்களின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உள்ளதாக அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.

"பெரும்பாலானவர்கள் இந்த விதிகளைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் ஒரு சில விதிமீறல்கள் அன்றாடம் இருக்கவே செய்கின்றன. இரவுநேரத்தில் திறந்திருக்கும் பிரபலமான இடங்களில் குறிப்பாக இந்த விதிமீறல் நடக்கிறது.

"இரவு 10.30 மணிக்கு மேல் ஆட்கள் குடிப்பதைப் பார்க்கலாம். முகக்கவசம் அணிவதில்லை. ஒன்றுகூடலில் ஐந்து பேருக்கு மேல் இருப்பர், அல்லது வெவ்வேறு மேசைகளில் அமர்ந்திருப்பவர்கள் ஒன்றாகப் பேசிக்கொள்வார்கள்," என்று கூறினார் பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவரான திரு வோங்.

இதனால் வாடிக்கையாளர்களுக்குத் தேவையற்ற அபாயம் ஏற்படுகிறது என்றும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் மற்ற உணவு வர்த்தகங்களுக்கு இது நியாயமில்லை என்றும் அமைச்சர் வோங் சுட்டினார்.

அதனால் விதிமுறைகளை மீறும் வர்த்தகங்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும். அல்லது விதிமுறையைக் கடுமையாக மீறியிருந்தால் வர்த்தகம் மூடவும் உத்தரவிடப்படலாம் என்று அறிவிக்கப்பட்டது.

உதாரணத்திற்கு, ஒரே இடத்தில் பலதரப்பட்ட பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் பின்பற்றப்படாமல் இருந்தால் வர்த்தகத்தை மூட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவு இடுவர்.

அத்துடன் அந்த விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்றது சுகாதார அமைச்சு.

கிருமி முறியடிப்புத் திட்டத்தை அடுத்து இரண்டாம் கட்டத் தளர்வின்போது சுமார் 20 உணவு, பான வர்த்தகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்