அண்டைவீட்டாரின் உயிர்களைக் காப்பாற்றிய 81 வயது மூதாட்டியைப் பாராட்டும் வகையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அவருக்குச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
கடந்த மாதம் 9ஆம் தேதியன்று ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 91 புளோக் 917ல் உள்ள ஒரு வீட்டில் தீப்பிடித்துக்கொண்டது.
தீயை அணைக்க பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் திருவாட்டி லிம் இ சின் உதவினார்.
“முதியவராக இருந்தாலும் தீயை அணைக்க உதவி செய்ய அவர் கொஞ்சம்கூடத் தயங்கவில்லை. அவரது இந்த தன்னலமற்ற செயலால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அண்டை வீட்டாரையும் அவர் காப்பாற்றியுள்ளார்,” என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
வீடு தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தபோது வாளிகளில் தண்ணீரை அண்டை வீட்டாருக்குக் கொடுத்ததாக திருவாட்டி லிம் தெரிவித்தார்.
தீ அணைக்கப்பட்டதும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு மூன்று பேர் கொண்டு செல்லப்பட்டனர்.