சிங்கப்பூரில் நேற்று (செப்டம்பர் 17) அறிவிக்கப்பட்ட 18 கிருமித்தொற்றுச் சம்பவங்களில் ஒருவர் உள்ளூர் சமூகத்தில் வசிக்கும் 48 வயதான இந்திய நாட்டு ஊழியர். வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் அவருக்கு முந்தைய கிருமித்தொற்று சம்பவங்களுடன் தொடர்பு இல்லை.
கிருமித்தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லாத அவருக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு வாரங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் பரிசோதனையின்போது கிருமித்தொற்று கண்டறியப்பட்டது.
பிரான்சில் இருந்து திரும்பிய வேலை அனுமதிச் சீட்டு கொண்டவருக்கும் இந்தியாவிலிருந்து திரும்பிய சார்ந்திருப்போர் அட்டையில் இருப்பவருக்கும் நேற்று கிருமித்தொற்று அறிவிக்கப்பட்டது.
இருவருக்கும் கிருமித்தொற்று அறிகுறிகள் இல்லை; ஆனால், இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வந்த இடங்களின் பட்டியலில் சிம் லிம் ஸ்குவேர் சேர்க்கப்பட்டுளது.
நேற்று அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 15 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களாவர்.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த 2 வாரங்களாக 1ஐ விட குறைந்து நிலையாக உள்ளது.
இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 30 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 950,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.