அனைவருக்கும் தடுப்பூசி: சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து தலைமையேற்பு

அனைவருக்கும் தடுப்பூசி: சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து தலைமையேற்பு

2 mins read
2a7c7330-48d2-40bd-aa34-3d9f40c1c95a
நேற்று  மாலையில் சவூதி அரேபியா ஏற்பாடு செய்திருந்த ஜி20 நாடுகளின் மெய்நிகர் முறையில் நடத்தப்பட்ட 'கூட்டு நிதி, சுகாதார அமைச்சர்கள் சந்திப்பில்' திரு ஹெங்கும் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கும் பங்கேற்றனர்.  படம்: ஹெங் சுவி கியட்டின் ஃபேஸ்புக் பக்கம் -

உலக மக்கள் அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி கிடைப்பதை ஆதரிக்கும் 'கொவேக்ஸ் நண்பர்கள்' திட்டத்திற்கு சிங்கப்பூரும் சுவிட்சர்லாந்தும் தலைமையேற்றுள்ளன என்று துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று மாலையில் சவூதி அரேபியா ஏற்பாடு செய்திருந்த ஜி20 நாடுகளின் மெய்நிகர் முறையில் நடத்தப்பட்ட 'கூட்டு நிதி, சுகாதார அமைச்சர்கள் சந்திப்பில்' திரு ஹெங்கும் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கும் பங்கேற்றனர்.

தடுப்பூசி உருவாக்கத்தை முடுக்கிவிடவும் தயாரிப்புக் கொள்ளளவை அதிகப்படுத்தவும் நியாயமான, பாரபட்சமற்ற விநியோகத்தை உறுதிசெய்யவும் ஏதுவாக நாடுகளும் அனைத்துலக அமைப்புகளும் தனியார் துறையும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக திரு ஹெங் சொன்னார்.

கடந்த ஜூன் மாதம் 'கொவேக்ஸ்' திட்டத்தில் இணைய ஆர்வம் தெரிவித்த முதல் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என சுகாதார அமைச்சின் பேச்சாளர் முன்னதாகக் கூறியிருந்தார்.

அத்திட்டத்தில் பங்கேற்றுள்ள 76 நாடுகளுக்கும் அத்திட்டத்தின் கீழ் ஆதரவளிக்கப்படும் மற்ற 92 ஏழை நாடுகளுக்கும் விரைவாகவும் நியாயமாகவும் கொரோனா தடுப்பூசி கிடைக்க 'கொவேக்ஸ் நிதித் திட்டம்' வழிவகை செய்யும்.

"விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கும்போது, பயணிகளுக்கும் பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கும் உத்தரவாதம் வழங்குவதில் கொரோனா பரிசோதனை முக்கிய அம்சமாகத் திகழும். அனைத்துலகத் தரநிலைகளை உருவாக்குவதிலும் சோதனை முடிவுகளை விரைந்து பகிர்ந்துகொள்வதிலும் நாம் இணைந்து செயல்பட வேண்டும்," என்றார் திரு ஹெங்.

மேலும், எதிர்காலத் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில், இடைவெளிகளை அடையாளம் கண்டு, நமது சுகாதார, நிதி மீட்சித்திறனை வலுப்படுத்துவதை ஜி20 நாடுகள் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்

குறிப்புச் சொற்கள்