சிங்கப்பூரில் நேற்று (செப்டம்பர் 21) அறிவிக்கப்பட்ட 31 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 9 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
அவர்களில் எழுவர் இந்தியாவிலிருந்தும் இருவர் ஈரானிலிருந்தும் திரும்பியவர்கள்.
நேற்று உள்ளூர் சமூகத்தில் புதிய கிருமித்தொற்று சம்பவம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எஞ்சிய 22 பேர் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட 16 பேருக்கு கொவிட்-19 கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 வாரங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் பரிசோதனைகளில் அறுவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
உள்ளூர் சமூகத்தில் உறுதி செய்யப்பட்ட புதிய சராசரி தினசரி கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து ஒன்றாக உள்ளது.
ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த 2 வாரங்களாக 1ஐ விட குறைந்து நிலையாக உள்ளது.
இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 31.4 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 968,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.