அக்டோபர் முதல் தேதியிலிருந்து, 300க்கு மேற்பட்ட இருக்கை வசதிகள் கொண்ட பெரிய திரையரங்குகளில் 150 பேர் வரை, ஒவ்வொரு பிரிவிலும் 50 பேர் என்ற விகிதத்தில் படம் பார்க்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
மற்ற சிறிய திரையரங்குகளும் அவற்றின் இருக்கை அளவில் பாதி அளவுக்கு படம் பார்ப்போரை அனுமதிக்க முடியும். அனைத்து திரையரங்குகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிர்வகிக்கப்பட வேண்டும்.
ஜூலை 13ஆம் தேதி முதல் 50 பேர் வரை படம் பார்க்க திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ளூர் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் தொடர்ந்து குறைவாக இருப்பதால், மேலும் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நோக்கில் அமைச்சுகள் நிலை பணிக்குழு இந்த மாற்றங்களை இன்று அறிவித்தது.
கூடுதல் வர்த்தக நடைமுறைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் வேளையில், மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து பாதுகாப்பு நடைமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவரான லாரன்ஸ் வோங் கேட்டுக்கொண்டார்.
படிப்படியாக வர்த்தகத்தை அனுமதிக்கும் இந்த நடைமுறை வெற்றிகரமாக அமைந்தால் இதே வழியில் பொருளியல் மற்றும் சமுதாய நடவடிக்கைகளை அனுமதிக்க முடியும் என்ற திரு வோங், பாதுகாப்பான நடைமுறைக்கு மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்கையாற்றினால்தான் அது சாத்தியமாகும் என்றார்.