சிங்கப்பூரில் உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதையடுத்து, வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் 100 பேர் வரை இருக்க சோதனை முறையில் அனுமதி வழங்கப்படுகிறது.
அக்டோபர் மாதம் 3ஆம் தேதிலிருந்து நடப்புக்கு வரும் இந்த நடைமுறையில், சுகாதார பாதுகாப்பு விதிகளை அனைவரும் கடைப்பிடிப்பதுடன் ஆலயங்கள் அதற்கான நடவடிக்கைகளை நிர்வகிப்பது அவசியம்.
அவ்வாறு 100 பேர் அனுமதிக்கப்படும்போது ஒவ்வொரு பிரிவிலும் 50 பேர் வீதம் இரண்டு பகுதிகளில் பிரித்து அனுமதிக்கப்படலாம். இந்த விவரங்களை அமைச்சுகள் நிலை பணிக்குழு இன்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இது வெற்றிகரமாகப் பின்பற்றப்படும் நிலையில், கூட்டு வழிபாட்டுச் சேவைகளில் பங்கேற்க 5 பிரிவுகளில் தலா 50 பேர் என்ற விகிதத்தில் அனுமதிக்கவும் கலாசார, சமூக, இளையர் பிரிவு அமைச்சு திட்டமிடுகிறது. அது தொடர்பான விரிவான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
12 சமய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்ட கலாசார, சமூக, இளையர் பிரிவு அமைச்சு கடந்த மாதம் 7ஆம் தேதியிலிருந்து 50 பேர் ஆலயத்துக்குள் இருக்க அனுமதி வழங்கியது.