அடுத்த மாதத்தில் இருந்து வெளிநாட்டுப் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கான நுழைவு அனுமதி இரு வாரங்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட வேண்டும்.
நிலப் போக்குவரத்து ஆணையம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதற்கு ஆறு மாத விலக்கு அளித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வரும் அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து, வெளிநாட்டுப் பதிவெண்ணுடன் கூடிய கார், மோட்டார்சைக்கிள் வைத்திருக்கும் வாகனமோட்டிகள் 14 நாள்களுக்கு ஒருமுறை வாகன நுழைவு அனுமதிக் கட்டனம் செலுத்த வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒருமுறை புதுப்பித்தால் இரு வாரங்களுக்குச் செல்லுபடியாகும் என்ற மார்ச் 18ஆம் தேதிக்கு முன்பிருந்த நடைமுறை இனி தொடரும்.
சிங்கப்பூர் சாலைகளில் வழக்கநிலை திரும்புவதற்கான இன்னோர் அறிகுறியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
ஆறு மாத விலக்கு அறிவிப்பிற்குமுன், தாங்கள் தங்கியிருக்கும் காலத்தை நீட்டிக்க விரும்பினால் அதற்காக வாகனமோட்டிகள் ஆணையத்தின் சின் மிங் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.
ஆயினும், சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசிய ஊழியர்கள் இங்கேயே தங்கியிருக்க உதவும் வகையில் அவர்களுக்கு அந்த விதிமுறையைத் தளர்த்தியது. பின்னர், புதுப்பிப்பு விண்ணப்பதாரர்கள் தனது அலுவலகத்தில் திரண்டுவிடக்கூடாது என்பதற்காக மற்ற வாகனமோட்டிகளுக்கும் அந்தத் தளர்வு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், அக்டோபர் 1ஆம் தேதிக்குள் சிங்கப்பூருக்குள் நுழையும் வாகனங்கள் உட்பட வெளிநாட்டுப் பதிவெண் கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் இரு வார செல்லத்தக்க கால விதிமுறை இனி பொருந்தும்.
அக்டோபர் 15ஆம் தேதியில் இருந்து, காலாவதியான வாகன நுழைவு அனுமதி வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்கும்.
வெளிநாட்டுப் பதிவெண் கொண்ட வாகனமோட்டிகள் தங்களது வாகனங்களுக்காகச் செலுத்த வேண்டிய மொத்த தொகை எவ்வளவு என்பதை https://www.onemotoring.com.sg/content/onemotoring/home.html என்ற இணையப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள இணையக் கணிப்பான் மூலம் கணக்கிடலாம்.
‘ஏஎக்ஸ்எஸ்’ இயந்திரங்கள் அல்லது உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளுக்கு அருகே அமைந்துள்ள ஆணையத்தின் 24 மணிநேர ‘ஆட்டோபாஸ் அட்டை’ பணம் நிரப்பும் சாவடிகள் மூலமாகவும் அவர்கள் பணம் செலுத்தலாம்.