சிங்கப்பூரில் இன்று (செப்டம்பர் 25) நண்பகல் நிலவரப்படி புதிதாக 11 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,665 ஆகியுள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில், உள்ளூர் சமூகத்தில் யாருக்கும் கிருமித்தொற்று இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இருவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
நேற்று 15 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.
வெளிநாடுகளிலிருந்து திரும்பிய சிங்கப்பூரர், நிரந்தரவாசி, வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர், சார்ந்திருப்போர் அனுமதி அட்டை வைத்திருப்பவர், நீண்ட கால வருகை அனுமதி வைத்திருப்பவர் என தலா ஒருவருக்கு என ஐவருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அவர்களில் நால்வர் இந்தியாவிலிருந்து திரும்பியவர்கள்; ஒருவர் இந்தோனீசியாவிலிருந்து திரும்பியவர்.
எஞ்சிய 10 பேர் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
உள்ளூர் சமூகத்தில் பதிவான புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் தினசரி சராசரி கடந்த இரு வாரங்களாக 1ஐ விட குறைந்து நிலையாக உள்ளது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த 2 வாரங்களாக 1ஐ விட குறைந்து நிலையாக உள்ளது.
இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 32.3 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 987,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.