தீவு முழுவதும் இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையின் பயனாக சந்தேகத்துக்குரிய 162 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) தெரிவித்தது.
பிடிபட்டவர்களில் 14 வயது சிறுமியும் அடங்குவார் என்றும் போதைப்பொருள் புழங்கிய சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் சிஎன்பி நேற்று தனது அறிக்கையில் குறிப்பிட்டது. இம்மாதம் 14ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவந்த சோதனை நடவடிக்கை
களின்போது $260,500 மதிப்புள்ள போதைப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். ஒரு சம்பவத்தில், போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் கடந்த 14ஆம் தேதி தியோங் பாரு வட்டாரத்தில் உள்ள எங் ஹூன் ஸ்திரீட் அருகே 38 வயது ஆடவர் பிடிபட்டார்.
விசாரணையைத் தொடர்ந்து அதே வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு 30 வயது மாது ஒருவர் பிடிபட்டதாகவும் சிஎன்பி கூறியது.
ஏராளமான போதைப்பொருட்களுடன் சுமார் $20,000 ரொக்கமும் அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக அது தெரிவித்தது. மற்றொரு சம்பவத்தில் பீச் ரோடு வட்டாரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறைகளில் பெண் உள்ளிட்ட ஐவர் சிக்கினர்.