கட்டாய காப்புறுதித் திட்டமான ‘கேர்ஷீல்ட் லைஃப்’ இன்று முதல் நடப்புக்கு வருகிறது. இப்புதிய நீண்டகால பராமரிப்புக் காப்புறுதித் திட்டம் 1980ஆம் ஆண்டு உட்பட அதற்குப் பின்னர் பிறந்த அனைத்து சிங்கப்பூரர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது.
‘மெடிஷீல்ட் லைஃப்’ வேறு
இத்திட்டத்தின் கீழ் நீண்டகாலமாகக் கடுமையான குறைபாட்டால் பாதிக்கப்படுவோருக்கு வழங்குதொகை கிடைக்கும். மாதாந்திர வழங்குதொகை குறைந்தபட்சம் 600 வெள்ளியாக இருக்கும். குறைபாடு இருக்கும் வரை இந்த வழங்குதொகை அளிக்கப்படும். அது பாதிக்கப்பட்டவரின் வாழ்நாள் முழுவதுமாக இருந்தாலும் பொருந்தும் என்று கூறப்பட்டது.
திட்டத்தின் வழங்குதொகைக்கு தகுதிபெற...
வழங்குதொகை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.
வழங்குதொகைக்கு ஒருவர் தகுதிபெற, ஆறு அன்றாட நடவடிக்கைகளில் குறைந்தது மூன்றைத் தாமாகச் செய்ய இயலாத நிலையில் இருக்க வேண்டும். குளிப்பது, உடுத்துவது, சாப்பிடுவது, கழிவறைக்குச் செல்வது, நடமாடுவது மற்றும் கட்டிலிலிருந்து நாற்காலிக்கோ நாற்காலியிலிருந்து கட்டிலுக்கோ நகர்ந்து செல்வது ஆகியவை அந்த ஆறு அன்றாட நடவடிக்கைகளாகும்.
வழங்குதொகைக்கு விண்ணப்பிக்க...
சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மதிப்பீடு செய்த பின்னர் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்புக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
சந்தா கட்டணம்...
இப்புதிய திட்டத்திற்கான வருடாந்திர சந்தாவை மெடிசேவ் பயன்படுத்திக் கட்டலாம். 30 வயதில் தொடங்கி 67 வயது வரை ஒருவர் மொத்தம் 38 முறை சந்தா செலுத்தி இருப்பார். 67 வயதை எட்டிய பின்னர் வாழ்நாள் முடியும்வரை அவருக்கு இத்திட்டம் காப்புறுதி அளிக்கும். சந்தா செலுத்த தங்களின் மெடிசேவ் கணக்கில் போதுமான பணம் இல்லாத பட்சத்தில் துணைவரின் மெடிசேவ் கணக்கை ஒருவர் பயன்படுத்திக்கொள்ளலாம்.