கொரோனா தொற்று சூழல் காரணமாக விமானப் போக்குவரத்துத் துறை பெரிதும் நசிவைச் சந்தித்துள்ள வேளையில், உள்ளூர்வாசிகளுக்கு வித்தியாசமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் நோக்கில் விமானப் பயணச் சூழலில் உணவு உட்கொள்வது உட்பட 3 நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஆகப் பெரிய ஏர்பஸ் A-380 விமானத்தில் எகானமி பிரிவு அறையில் மூன்று மணி நேரம் செலவழித்து மதிய உணவு உட்கொள்ள $50 செலவாகும்.
இன்னும் மேம்பட்ட அனுபவம் தேவைப்பட்டால், முதல் வகுப்பு சிறப்பு அறைகளில் மதிய உணவு உட்கொள்ள $600 கட்டணம்.
இதற்கிடையே, அந்த நிறுவனத்தின் பயிற்சி வளாகத்தைச் சுற்றிப்பார்க்க 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு $15, பெரியவர்களுக்கு $30 கட்டணம்.விமான பாவனை அனுபவம் பெற விரும்பினால் மூவருக்கு $500 என்ற விதத்தில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே உணவு கொண்டுவந்து கொடுக்கும் சேவையும் உண்டு. வர்த்தகப் பிரிவு உணவுக்கு $288. முதல் வகுப்பு உணவுக்கு $448. பிரபல சமையல் கலை வல்லுநர்களைக் கொண்டு இந்த உணவுப் பட்டியல், உணவு தயாரிக்கப்படுவதாக மக்கான்சூத்ரா நிறுவனத்தின் நிறுவனர் கே.எஃப். சீத்தோ குறிப்பிட்டார்.
இந்த விலைப் பட்டியலில் பொருள், சேவை வரி சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.