சிங்கப்பூரில் இன்று (அக்டோபர் 6) நண்பகல் நிலவரப்படி புதிதாக 11 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,830 ஆகியுள்ளது.
இன்று உள்ளூர் சமூகத்தில் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் இருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் நால்வர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்; ஐவர் விடுதிவாசிகள்.
கடந்த மாதம் 27ஆம் தேதி மாலை 6.05 முதல் 6.35 மணிக்கு உட்பட்ட நேரத்தில் தங்ளின் ஹால்டில் உள்ள ஷெங் சியோங் பேரங்காடிக்கு கொவிட்-19 நோயாளி ஒருவர் சென்றதாக நேற்று சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
இந்திய நாட்டவரான 15 வயது இளம்பெண்ணுக்கு நேற்று கிருமித்தொற்று அறிவிக்கப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கிருமித்தொற்று இருந்ததையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
சிங்கப்பூரில் தனியார் பள்ளி ஒன்றின் மாணவியான அவர், கிருமித்தொற்று அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு, கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்றிருந்தார்.
விடுதிவாசிகள் ஐவருக்கும், இந்தியாவிலிருந்து வந்த 50 வயது நிரந்தரவாசி ஒருவருக்கும் நேற்று கிருமித்தொற்று அறிவிக்கப்பட்டது.
இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 35.1 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1 மில்லியனுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.