சிங்கப்பூரில் இன்று (அக்டோபர் 9) நண்பகல் நிலவரப்படி புதிதாக 10 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,859 ஆகியுள்ளது.
உள்ளூர் சமூகத்தில் புதிதாக யாருக்கும் கிருமித்தொற்று இல்லை.
கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். ஒருவர் தங்கும் விடுதியில் வசிப்பவர் . கடந்த மூன்று நாட்களாக சமூகத் தொற்று எதுவும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
நேற்று கிருமித்தொற்று அறிவிக்கப்பட்டவர்களில் 2 வயது சிங்கப்பூர் சிறுமியும் ஒருவர். அவர் செப்டம்பர் 25ஆம் தேதி நேப்பாளத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார்.
இவருடன் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஐவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். குறுகிய கால பணித்திட்டத்திற்காக பிரான்சிலிருந்து வந்த பொறியியலாளர், 32 வயது ஜப்பான் நாட்டவர் ஆகியோரும் அதில் அடங்குவர்.
மற்ற இருவரும் செப்டம்பர் 23ஆம் தேதி மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த கப்பல் ஊழியர்கள்.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒன்பது பேரில் நால்வர் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 36 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.