சிங்கப்பூரில் களைகட்டும் 10-10-2020: பத்து மடங்கு அதிக ஜோடிகள் திருமணத்துக்குப் பதிவு

சிங்கப்பூரில் களைகட்டும் 10-10-2020: பத்து மடங்கு அதிக ஜோடிகள் திருமணத்துக்குப் பதிவு

2 mins read
b5753c3d-bbbf-4e97-bd7d-d33f6d6e9c39
10-10-2020 தேதி மிகவும் அருமையாக இருப்பதால் இந்தத் தேதியில் தாங்கள் மணம் புரிந்துகொள்ளப்போவதாக லியூ ஷான் ஹெங், 28, ஜாய்ஸ்லின் லிம், 26, என்ற மணமக்கள் தெரிவித்தனர். படம்: ONETHREEONEFOUR -

சிங்கப்பூரில் இந்த ஆண்டில் மிகவும் மங்கலகரமான திருமண நாள் நாளை 10-10-2020 சனிக்கிழமைதான் என்று தெரிகிறது. திருமணத்துக்குத் திட்டமிடுவோரும் திருமணத்தை நடத்தி வைப்பவர்களும் இப்படியே சொல்கிறார்கள்.

இந்த மங்கல நாளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளலாம். சனிக்கிழமையாகவும் இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

திருமண நிகழ்ச்சிகள் நாளை சனிக்கிழமை நடக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து திருமணப் பதிவகத்துக்கும் முஸ்லிம் திருமணப் பதிவகத்துக்கும் 876 ஜோடிகள் திருமணக் கடிதங்களைத் தாக்கல் செய்து இருப்பதாக திருமணப் பதிவகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சராசரியாக 91 திருமண நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அதை வைத்துப் பார்க்கையில் 10 மடங்கு அதிக ஜோடிகள் நாளை மணம் புரிகிறார்கள் என்பது தெரியவருகிறது.

"அக்டோபர் 10 என்பது பொதுவாக மங்கல நாள். அதை 10ம் அடங்கிய பூரண நாளாகக் கருதுகிறார்கள். அந்த நாளில் திருமணம் செய்துகொண்டால் மணப்பொருத்தம் அருமையாக இருக்கும்.

"வார இறுதி நாட்களில் மங்கல நாள் வந்தால் எல்லா நட்சத்திரங்களும் இணங்கி ஒரே கோட்டில் வருவதாக கருதப்படுகிறது," என்று திருமணத்தை நடத்தி வைக்கும் ஜோனா போர்ட்டில்லா என்பவர் கூறினார்.

அக்டோபர் 10ஆம் தேதி திருமணத்திற்கும் புதிய தொழிலைத் தொடங்கவும் மங்கலகரமான ஒரு நாளாகக் கருதப்படுகிறது என்று 'அடலினா பாங் ஃபெங்ஷுய் கன்சல்டன்ஸி' என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அடலினா பாங் தெரிவிக்கிறார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் ஜூலை மாதத்திற்கும் இடையில் மணம் புரிந்த ஜோடிகளின் எண்ணிக்கை 10,542.

சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 13,626 ஆக இருந்தது. கொவிட்-19 சூழல் காரணமாக இந்த ஆண்டு 23 விழுக்காடு இந்த எண்ணிக்கை குறைந்து உள்ளது.

டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து திருமணப் பதிவகத்திலும் முஸ்லிம் திருமணப் பதிவகத்திலும் அக்டோபர் 6ஆம் தேதி நிலவரப்படி, 331 ஜோடிகள் பதிந்துகொண்டு இருக்கிறார்கள் என்று அந்தப் பேச்சாளர் மேலும் கூறினார்.

20-02-2020 என்ற தேதியிலும் சிங்கப்பூரில் பல திருமணங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்