சிங்கப்பூரில் இன்று (அக்டோபர் 11) நண்பகல் நிலவரப்படி புதிதாக 10 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,876 ஆகியுள்ளது.
உள்ளூர் சமூகத்தில் புதிதாக யாருக்கும் கிருமித்தொற்று இல்லை.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் எழுவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
நேற்று பதிவான 7 கிருமித்தொற்று சம்பவங்களில் ஒன்று உள்ளூர் சமூகத்தில் பதிவானது.
இந்தோனீசியாவிலிருந்து திரும்பிய பிறகு, கைக்குழந்தையை வைத்திருந்த அந்தக் குடும்பத்தார் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அவர்களின் குடும்ப உறுப்பினரான நிரந்தரவாசியும் வீட்டிலேயே தங்கியிருந்து தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. அவருக்கும் கிருமித் தொற்று ஏற்பட்டதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
நேற்று பதிவான கிருமித்தொற்று சம்பவங்களில் ஒருவர் விடுதிவாசி; மற்ற ஐவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
ஒருவர் தங்கும் விடுதியில் வசிப்பவர். கடந்த மூன்று நாட்களாக சமூகத் தொற்று எதுவும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
பெலாருசிலிருந்து திரும்பிய நிரந்தரவாசி, கத்தாரிலிருந்து திரும்பிய சிங்கப்பூரர், பிரான்சிலிருந்து திரும்பிய வேலை அனுமதிச்சீட்டு கொண்ட ஊழியர், சிங்கப்பூரில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலில் பணிபுரிய பிலிப்பீன்சிலிருந்து வந்த இருவர் ஆகியோர் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு கிருமித்தொற்று கண்டவர்கள்.
நீ ஆன் சிட்டியிலிருக்கும் தக்காஷிமாயா, ஸ்குவேர் 2@நொவீனாவில் இருக்கும் டொன் டொன் டோங்கி, ஃபார் ஈஸ்ட் பிளாசாவில் இருக்கும் ஜோயுன் சலூன், மெர்ச்சென்ட் கோர்ட்டில் இருக்கும் குஷிகட்சு டனகா உணவகம் ஆகிய இடங்களுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்றதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 36.8 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.06 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.